ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

சோசியலிச பெருச்சாளிகளின் காலித்தனமான வாதங்கள்.

சமீப காலமாக தாய்லாந்தில் இருந்து எழுதிவரும் "கலையரசன்" என்ற நண்பரின் வலைப்பக்கங்களை படித்துக்கொண்டு வருகிறேன்.அவருடைய பதிவு ஒன்றில் "இலங்கையில் சீன பூச்சாண்டி" என்ற ஒரு தலைப்பு இடப்பட்டு ஒரு கட்டுரை இருந்தது.அதற்க்கு முன் குறிப்பாக

"இலங்கையில் மார்க்சிச-லெனினிச பாதையில் இயங்கி வரும் "புதிய ஜனநாயகக் கட்சி" யினரால் மாதமொருமுறை வெளியிடப்படும் வெகுஜனப் பத்திரிகையான "புதிய பூமி"யில் வந்த கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகின்றது."

என்ற குறிப்பும் இடம் பெற்றிருந்தது.


அந்த கட்டுரை குறித்து சில கருத்துக்களை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அந்த கட்டுரையில்

"சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுக்கப்பட்ட அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறலாம் என்பது வேறு விடயம். சாத்தியப் பாடுகளை எல்லாம் சமகால உண்மைகளாகக் கருதுவது அறிவுடைமை அல்ல."
என்று குறிப்பிடுகிறது.சீன இதுவரை எந்த நாட்டின் மீது மேலாதிக்கம் செலுத்தவில்லையாம்.மாவோவின் காலத்திலிருந்தே திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது.திபெத்தின் தனி தேசிய இனம் அழிக்கப்பட்டு மாவோவின் இசைவோடு திபெத் சுரண்டப்பட்டது ,சீனாவோடு பகைமை கொண்ட இந்தியா தலாய் லாமாவிற்கு புகலிடம் அளித்து "நாடு கடந்த அரசாங்கத்தை" அங்கீகரித்தது. திபெத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு கூசாமல் "நாங்கள் எந்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இந்த லட்சணத்தில் "திபெத்தில் அமெரிக்கா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது". என்று வேறு கதறுகிறார்கள்.

சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல மூலவளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. அண்மையிற் கூடச் சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டது. எனினும் அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை மதிப்பதாக இல்லை.
என்று கூறுகிறார்கள்.இலங்கையில் தன் கோரக்கால்களை அழுத்தி பதிந்துள்ளது சீனா.சீன தொழில் துறைக்கு தற்ப்போது பல மடங்கு எரிசக்தி தேவை.எரிசக்தியை எடுத்துசெல்ல பாதுகாப்பான பாதையாக இலங்கை இருக்கும் என்று நம்புகிறது.தென்னாசியாவில் மூலதன வல்லரசாக அமெரிக்காவிற்கு போட்டியாக உருமாற விரும்புகிறது .அமெரிக்காவிற்கு ஒரு டிகோ- கார்சியா போல சீனாவிற்கு ஒரு இலங்கை தேவைப்படுகிறது.இதில் இன்னொரு குறிப்பிட வேண்டிய கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கடற்கரைகளை கைப்பற்றி வைத்திருக்கிறது ஆகவே எங்களால் முடிந்த வரை உலக நாடுகளின் கடற்கரைகளை அபகரித்துக்கொள்கிறோம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்.நியாயப்படுத்த முயல்கிறார்கள்.இனி மேல் சோசியலிச வெறி பிடித்த சீனா மற்றும் ஏகாதிபத்திய வெறியோடு காத்திருக்கும் அமெரிக்க இந்திய நாடுகள் அங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல ,அங்குள்ள சிங்களவர்களின் உழைப்பையும் உறிஞ்சி தன் ஜீவனத்தை நடத்திக்கொள்வார்கள்.


ஒரு நாட்டின் அரசு தன் சொந்த மக்கள் மீது மேற்க்கொள்ளும் அத்துமீறல்களை குறித்து கேள்வி எழுப்புவது அந்த நாட்டின் உள் விவகாரத்தில் தலை இடுவதாகும் என்பதை ஒப்புக்கொள்வது ஒருவகையில் அத்துமீறலை அங்கீகரிப்பதே ஆகும்.தன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் இலங்கை அரசுக்கு ,இன ஒடுக்குமுறைக்கு துணை போகும் அளவிற்கு சரிந்துபோயிருக்கிறது "சீனத்து சோசியலிசம்".






சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர் இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளுகிற முயற்சிகள் பற்றிப் பேசுவதில்லை. சம்பூரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்பூரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் இந்தியா எண்ணெய் அகழ்வுக்கு உடன்படிக்கை செய்ததை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்கு உரியன.
என்று கூறுகிறார்கள்..இந்திய தரகு முதலாளிகள் உள்ளிட்ட சிலர் இலங்கையை தன் வியாபார சந்தையாக மற்ற முயற்சி செய்வதை நான் மறுக்கவில்லை.அதை நான் நியாபடுத்தவும் இல்லை.அவர்கள் செய்கிறார்கள் ஆகவே நாங்களும் செய்கிறோம் என்று மறைமுகமாக சொல்வது கருத்து வெறித்தனமின்றி வேறில்லை.


ரஷியா,சீனா,வியட்நாம் போன்ற நாடுகளை வழிநடத்துவது இன்று மார்க்சியமோ,சோசியலிசமோ இல்லை."உலகமயம்" என்ற கருத்தாக்கம் தான்.உலக மயம் என்ற பொருளாதார கட்டமைப்பின் பங்காளிகளாவதே இந்த நாடுகளின் ஒரே லட்சியம்.சமூக ஏகாதிபத்தியம் என்றழைக்கப்பட்ட ரஷியா,இப்போது முழுமையான ஏகாதிபத்தியமாக உரு மாறிவிட்டது.உலக பேரரசு எனும் இடத்தை கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு போட்டிக்களத்தில் நாளை நிற்கப்போகிறது சீனா.அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இருபது வருடமாய் போரிட்டு விரட்டிய வியட்நாம் இன்று அதே அமெரிக்காவோடு கை கோர்த்துக்கொண்டது.மார்க்சியமின்றி உயிர் வாழ் முடியாது என்று முழங்கிய நாடுகள் இன்று உலகமயத்தோடு ஒட்டி உறவாடுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்திய பின் புலத்தில் இயங்கிய "சாடிஷ்டா" பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக கொரில்லாப்போரில் வெற்றி அடைந்த கியுபா ,சாந்தினிஷ்டா இயக்கத்தின் மூலம் புரட்சியை மேற்கொண்ட நிகரகுவா,நிலத்தடி நீர் உரிமையை காக்க தன் மக்களை ஆயுதம் எந்திப்போரட வைத்து பன்னாட்டு சுரண்டலுக்கு முடிவு கட்டிய பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாம் தன் வரலாறை வசதியாக மறந்து விட்டன.அப்படி மறக்காமல் இருந்தால் குறைந்த பட்சம் வன்னியில் கந்த கந்தலாக்கப்பட்ட மனித உரிமைகளை பற்றியாவது ஐ.நா.மன்றத்தில் இவர்கள் பேசி இருப்பார்கள். இலங்கையின் அப்பட்டமான இன படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த காரணத்தால் இங்குள்ள சோசியலிச வாதிகள் யாருக்கும் இந்து மதவெறி பற்றியோ அல்லது பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களையோ தட்டி கேட்க்க எந்த அருகதையும் இல்லை.மக்களுக்கு பயன் படாத எந்த இயக்கமும் சாக்கடையாகத்தான் போகும். இதில் சோசியலிசம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

சனி, 15 ஆகஸ்ட், 2009

தியானன் மென் சதுக்கம் -- சீன வரலாறின் கரிய பக்கங்கள்.







1989 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மாணவர் கிளர்ச்சியான "தியானன் மென்" சதுக்கப்படுகொலைகள், சீன வரலாறின் கரிய பக்கங்கள்.கடந்த ஜூன் மூன்று,அதன் இருபதாம் ஆண்டு நினைவு நாள்.இதை உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்கள்,சிந்தனைவாதிகள்,மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் அனுஷ்டித்தனர்.
ஆனால் சீனாவை பொறுத்தவரை "தியானன் மென் " சதுக்கம் பற்றி நினைவு கூறப்படாத நிலையே இன்னும் தொடர்வதாக ஊடகங்கள் சொல்கின்றன.மேலும் இந்த நிகழ்வை தன் வானளாவிய செல்வாக்கால் மூடி மறைக்கவும் முயற்சி செய்கிறது.எல்லா ஊடகங்களையும் கட்டுப்படுத்திவிடலாம்.ஆனால் இணையதளங்களில் பரவும் செய்திகளை யாரும் தடுக்க முடியாது என்று நாம் நினைக்கலாம்.மேற்குலகை பொறுத்தவரை சீனாவின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஒரு சிறிய செய்தி.
சீன அரசுக்கு பணிந்து கூகிள் போன்ற பெரும் நிறுவனம் தன் தேடு தளத்தில் "தியானன்மென் "படங்களை பல ஆண்டுகளாகவே தணிக்கை செய்து வைத்திருக்கிறது.அவற்றை யாரும் பார்க்ககூடாதாம்.இதே போல யாகூ மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களும் சீன அரசுடன் ஒத்துழைக்கின்றன.சீன அரசை விமர்சித்து அங்கே எழுதிவரும் பலரின் இணைய முகவரிகளை அரசுக்கு கொடுத்து ஒற்றர்களின் பணியை எளிமையாக்கிருக்கின்றன.பிரபல எழுத்தாளரான " நாகார்ஜுனன்" தன் வலைப்பதிவு ஒன்றில் தியனன்மென் பற்றிய அறிய புகைப்பட தொகுப்பை வைத்திருந்ததாக எனது நண்பர்கள் தெரிவித்து இருந்தனர்.ஆனால் பல வழியில் முயற்சி செய்தும் போதுமான புகைப்படங்கள் கிடைக்கவில்லை.இது போன்ற தொழில் நுட்ப படுகொலைகளை நிகழ்த்திய சீன அரசின் கையில் சிக்கி மாண்டு போன எண்ணற்ற மனிதர்களை நாம் இப்போது நினைவு கூர்வோம்.